கிண்டி சிறுவர் பூங்கா கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை
கிண்டி சிறுவர் பூங்கா கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
கிண்டி சிறுவர் பூங்கா கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், சென்னை கிண்டியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை நேற்று திறந்து வைத்துள்ள முதல்வரே, இந்த பூங்காவில் 5 - 12 வயதுடையவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளீர்கள். இது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்குக்கான செலவினம் அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் தனியாகப் பூங்காவிற்கு வரப்போவதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவர் வருகிறார் என்றால், அவருடன் அம்மா,அப்பா, உறவினர்கள் என்று குறைந்தது 2-4 பேர் வரை வருவார்கள். அதனால் ஒரு குடும்பத்தினருக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
எனவே பெரியவர்களுக்கு ரூ.60 நிர்ணயம் செய்திருப்பது நியாயமானதல்ல. சிறுவர்களுக்கு ரூ.10 என்பதைப்போல பெரியவர்களுக்கான கட்டணத்தை ரூ.20 என்று நிர்ணயம் செய்யப் பொதுமக்கள் சார்பாகக் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.