முகப்பு
தமிழ்நாடு

திருவிடைக்கழி பாலசுப்பிரமணியன் கோயிலில் பந்தல்கால் முகூர்த்த விழா

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 6:34 AM
திருவிடைக்கழி பாலசுப்ரமணியன் கோயிலில் பந்தல்கால் முகூர்த்த விழா
பகிர்:

மயிலாடுதுறையில் உள்ள திருவிடைக்கழி பாலசுப்ரமணியன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பந்தல்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில், 2000 ஆண்டுகள் பழமையான சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்படும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக விளங்கி வரும் இங்கு, இரணியாசுரனை வதம் செய்த முருகப்பெருமான், சிவபூஜை செய்து பாவ தோஷம் நீங்கிய ஸ்தலமாகவும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த ஸ்தலமாகவும் திகழ்ந்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க கோயிலின் திருப்பணிகள், கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நிறைவடைந்து, கும்பாபிஷேகம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி, துலா லக்னத்தில் காலை 8.30 மணியிலிருந்து 10 மணிக்குள் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வெளிப்புறத்தில் 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக விநாயகர், நவகிரக மற்றும் லட்சுமி பூஜைகள் செய்யப்பட்டு பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

பூஜைகளை நந்தகுமார் குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேம்குமார் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.