விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியிருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. வட தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது.
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் சனிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையம், திருச்சி - சென்னை சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை என நகரின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.
இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாததால், மாணவர்களின் நலன் கருதி நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.