கும்பகோணம்: வேன் - லாரி மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பலி; 16 பேர் காயம்!
கும்பகோணம் அருகே வேன் - லாரி மோதிய விபத்தில் சிறுவன் பலி.
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே வேன் மீது ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பலியான நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சேத்தியாதோப்பில் இருந்து திருவாரூருக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேர் சுற்றுலா வேனில் இன்று காலை வந்துள்ளனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை வழியாக திருப்பனந்தாள் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் திரும்பும் போது, கும்பகோணத்திலிருந்து ஜல்லிகற்கள் ஏற்றிச் சென்ற லாரி, வேன் மீது மோதியது.
இதில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது. வேனில் பயணம் செய்த 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே லிங்கேஸ்வரன் என்ற ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த 16 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.