பாஜகவில் இருந்து விலகினார் ஆர்.கே.சுரேஷ்!
இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்தார் ஆர்.கே.சுரேஷ்...
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார்.
இதையும் படிக்க : பட்டினப்பாக்கத்தில் மறியல்!! ஸ்தம்பித்த சென்னை சாலைகள்!
தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம்வந்த ஆர்.கே.சுரேஷ், பாஜகவில் இணைந்து முக்கிய பதவியைப் பெற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக கருத்தப்பட்டார்.
இதனிடையே, ஆருத்ரா கோல்டு நிறுவனம் முறைகேடு வழக்கில் ஆர்.கே.சுரேஷிடம் சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தினர்.
ஆரூத்ரா வழக்குக்கு பிறகு பாஜகவில் ஆர்.கே.சுரேஷுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்த ஆர்.கே.சுரேஷை அகில இந்திய அமைப்புச் செயலாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட்ட நிலையில், ஆர்.கே.சுரேஷ் கூட்டணிக் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.