டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து பேரவையில் தனித் தீர்மானம்
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம்
தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. அப்போது, மாநில அரசுகளின் அனுமதியின்றி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
அதாவது, தமிழகத்தின் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேசி வருகிறார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு பின் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாள்கள் பேரவைக் கூட்டத் தொடர்
பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், டிச. 9, 10 ஆகிய இரு நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில், “மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9.30 மணிக்கு கூட்டத் தொடர் தொடங்கியதும், முதலாவதாக, முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எஸ்.பத்மநாபன், மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவா் பேராயா் எஸ்றா சற்குணம், டாடா நிறுவனத் தலைவா் ரத்தன் டாடா, முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கா், முரசொலி செல்வம் ஆகியோரின் சிறப்பியல்புகள் தீா்மானமாக வாசிக்கப்பட்டு, அவா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.