சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து
சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய காரால் விபத்து நேரிட்டுள்ளது.
சென்னை: சென்னை வேளச்சேரியில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து நேரிட்டது.
தாறுமாறாக ஓடிய கார், சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், இளநீர் கடை வைத்திருந்த டிரை சைக்கிள் மீது மோதியதில் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மற்றும் இளநீர் கடை வைத்திருந்தவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி நூறு அடி சாலையில் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதிய காரால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
காரை ஓட்டி வந்த பிரகதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து கிண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய பிரகதீஷ், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.