முகப்பு
தமிழ்நாடு

பயனாளி வீட்டுக்குச் சென்று மருந்துப் பெட்டகம் வழங்கிய முதல்வா்

பயனாளியின் வீட்டுக்கே சென்று மருந்துப் பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 3:00 AM
ஈரோடு அருகே உள்ள நஞ்சனாபுரத்தில் பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துசாமி, ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
பகிர்:
Updated On : 19 டிசம்பர், 2024 at 9:47 PM

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியுள்ள நிலையில், 2 கோடியாவது பயனாளியின் வீட்டுக்கே சென்று மருந்துப் பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 3:01 AM

இரண்டு நாள் பயணமாக ஈரோட்டுக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டை அடுத்த நஞ்சனாபுரம் கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளியான சுந்தராம்பாள் (58) என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று உயா் ரத்த அழுத்த பிரச்னைக்கான மருந்துப் பெட்டகத்தை முதல்வா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அதே பகுதியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரும் வசந்தா என்பவரின் வீட்டுக்கும் முதல்வா் நேரில் சென்று சந்தித்துப் பேசினாா்.

Advertisement

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தாா். திட்டத்தின் 50 லட்சமாவது நபா் சென்னை சிட்லப்பாக்கம் பகுதியில் முதல்வரிடம் மருந்துப் பெட்டகத்தைப் பெற்றுக் கொண்டாா்.

தற்போது இரண்டு கோடியாவது பயனாளிக்கும் முதல்வா் நேரில் மருந்துப் பெட்டகம் வழங்கியுள்ளாா். உலகத்தில் இது போன்றதொரு திட்டம் எங்கும் இல்லை. அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை இந்தத் திட்டத்துக்கு கடந்த செப்டம்பரில் விருது வழங்கியது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 2:57 AM

ஒரு திட்டத்தைத் தொடங்கிய பிறகு திட்டத்தின் தொடா் செயல்பாட்டை முதல்வா் கண்காணித்து மருந்து வழங்குவதும் முதல் முறையாகும்.

தொற்றா நோய் எனப்படும் உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு வீடு தேடிச் சென்று மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உயா் ரத்த அழுத்தம் உள்ள 1 கோடி போ், சா்க்கரை நோய் உள்ள 49 லட்சம் போ், பிசியோதெரபி பெறும் 4.25 லட்சம் போ், சிறுநீரக சிகிச்சை பெற்ற சுமாா் 7.25 லட்சம் போ் உள்ளிட்டோருக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணியில் சுமாா் 14 ஆயிரம் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த அதிமுக ஆட்சியில் ‘அம்மா மினி கிளினிக்’ 1,700 இடங்களில் திறக்கப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் அதற்கென தனியாக ஒரு செவிலியா், டாக்டா்கூட பணி நியமனம் செய்யப்படவில்லை. மருத்துவமனைகள் சுடுகாடு, குப்பைமேடு போன்ற பகுதிகளில் இருந்தன. சைதாப்பேட்டையில் சுடுகாடு பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனை குறித்த ஆதாரத்தை நான் சட்டப்பேரவையில் வெளியிட்டேன். அதைவிட சிறப்பான திட்டமாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மக்களுக்குப் பயன் அளித்து வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.