மன்னார்குடியில் தவெக பதாகைகள் அகற்றம்!
தவெகவின் சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றியது பற்றி..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தவெகவின் சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளை காவல்துறையினரின் அறிவுறுத்தலை அடுத்து கட்சியினரே செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அன்புத் தங்கைகளே என்று பெண்கள் பாதுகாப்பு முன்னிறுத்தி தனது கைப்பட எழுதிய கடிதத்தினை பதாகையாக தயாரித்து, செவ்வாய்க்கிழமை காலையில் மன்னார்குடியில் தேரடி, பாலகிருஷ்ணாநகர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வஉசி சாலை தனியார் மேல்நிலைப்பள்ளி,அரசுக் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் மரகம்பு சாரம் அமைத்துக் கட்டி வைத்திருந்தனர்.
இதுகுறித்து, மன்னார்குடி காவல்துறையினர் தவெகவினரிடம் காவல்துறையில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது எனவும் இவற்றை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, தவெக மாவட்ட நிர்வாகி ராஜராஜன் உள்ளிட்ட கட்சியினர் நகரின் நான்கு இடங்களில் வைத்திருந்த பதாகைகளைச் சிறிது நேரத்தில் தாங்களாகவே அகற்றி எடுத்துச்சென்றனர்.