முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் 4 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், புழல் சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன்(பிப். 20) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பாக, காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தபட்டார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் 4 தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் 22-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.