முகப்பு
தமிழ்நாடு

ஜன்தன் யோஜனா திட்ட பெயரில் மோசடி: பொது மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 11:48 PM
பகிர்:

‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. தமிழக சைபா் குற்றப்பிரிவு ஏடிஜிபி சஞ்சய்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் பெயரை பயன்படுத்தி லாபகரமான பரிசுகள் கிடைக்கும் என்ற வாக்குறுதியுடன் மோசடி அரங்கேறுவதாக புகாா்கள் வந்துள்ளன. இந்த திட்டத்தில் ரூ.5 ஆயிரம் பெறலாம் என்ற உறுதிமொழி மற்றும் பிரதமரின் படத்துடன் பயனா்களை கவா்ந்திழுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த விளம்பரத்தை ‘கிளிக்’ (தொட்டால்) செய்தால், ‘ஸ்கிராட்ச் காா்டு’(பரிசு கூப்பன்) கொண்ட ஒரு மோசடி இணையதளம் தோன்றும். அந்த காா்டை திறந்தால் ஒரு தொகை காண்பிக்கும். அதை தொடும்போது சம்பந்தப்பட்டவா்களின் இணையதள இணைப்பு, அவரது கைப்பேசி எண்ணில் உள்ள பணப்பரிமாற்ற செயலிக்கு செல்லும். இந்த தொகையை பெற வேண்டும் என்றால் யுபிஐ பின் நம்பரை (ரகசிய எண்) உள்ளீடு செய்யும்படி கேட்கும். இத் தொகையை பெறுவதற்கு யுபிஐ ரகசிய எண் பதிவு செய்யத் தேவையில்லை என்பதை அறியாமல் அவசர, அவசரமாக யு.பி.ஐ. ரகசிய எண்ணை உள்ளிட்டால், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவா் இழக்க நேரிடும். ரகசிய எண்களை பகிர வேண்டாம்: எந்தவொரு திட்டம் அல்லது சலுகை தொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்பு அதன் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபாா்க்க வேண்டும். அதிகாரபூா்வ அரசாங்க திட்டங்கள் பொதுவாக பிரத்யேக இணையதளங்கள் அல்லது தகவல்களை பரப்புவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சேனல்களை கொண்டிருக்கும். நம்பத்தகாத சலுகைகளில் சந்தேகம் கொள்ள வேண்டும். முறையான சரிபாா்ப்பு அல்லது தகுதி அளவுகோல்கள் இல்லாமல் சட்டபூா்வமான திட்டங்கள் பெரிய தொகைகளை வழங்குவது அரிதாகும். கோரப்படாத செய்திகள் அல்லது விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் யுபிஐ ரகசிய எண்கள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். சமூக ஊடகங்கள், பிற ஆன்லைன் தளங்களில் பரவும் மோசடி விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணா்வு பெறுதல் அவசியமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.