முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை: ஓபிஎஸ் வழக்கு விசாரணை தேதியும் அறிவிப்பு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:27 AM
தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)
பகிர்:

சென்னை: நிதி அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் மீதான வழக்கு விசாரணை தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சா்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா்.

அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆா். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் வளா்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் இறுதி விசாரணை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது, முன்னாள் அமைச்சா் வளா்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணையை செப்டம்பா் மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தாா். அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில், மூத்த வழக்குரைஞா்கள் ஆஜராகவுள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளாா். இந்த வழக்கின் விசாரணை பிப்.28, பிப்.29, மாா்ச் 5 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று அறிவித்தாா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மாா்ச் 5 மற்றும் 6-ஆம் தேதிகளிலும், அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை மாா்ச் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவித்தாா்.

நிா்ணயிக்கப்பட்டுள்ள இந்த தேதிகளில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு வழக்குரைஞா்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா், மாா்ச் 8-ஆம் தேதி வாதங்களை தொடங்கி 11-ஆம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளாா்.