தமிழில் "வணக்கம்" கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் வணக்கம் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
"என் மண், என் மக்கள்" பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரையில்,
தமிழில் "வணக்கம்" கூறி தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. கொங்குப் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியளிக்கிறது.
ஜவுளித்துறையில் சிறப்பு வாய்ந்த நகரமாக திருப்பூர் உள்ளது. மிகப்பெரிய அளவில் இங்கு கூடியுள்ள மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பது போல உள்ளது.
தொழில்துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது. ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்.
உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கிவருகிறது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தில்லியில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. காசி தமிழ்ச் சங்கமம், செங்கோல் இவற்றின் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி வருகிறேன் என்னை பொறுத்தளவில் தமிழ் கலாசாரமும், தமிழ் மொழியும் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. நாடு தான் முதன்மையானது என பாஜக கருதுகிறது என்றார்.