கசப்பான உண்மையை சொல்லப்போகிறேன்: பிரதமர் மோடி
கசப்பான உண்மையை சொல்லப்போகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
தூத்துக்குடி: கசப்பான உண்மைகளை சொல்லப்போகிறேன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கோரிக்கைகளாக இருந்தவை எல்லாம் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்றுள்ளார். மேலும், தூத்துக்குடி எம்பி கனிமொழியும் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், ரூ.17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். விழாவில் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, பல தசாப்தங்களாக கோரிக்கையாக இருந்தவற்றை, பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது நிறைவேற்றி வருகிறது என்றார்.
மேலும், தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்துமே, காங்கிரஸ் கட்சியில் வெறும் கோரிக்கைகளாகவே இருந்துள்ளன. தூத்துக்குடி, நெல்லையை மையப்படுத்திய பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதுலாக இருக்கும். இந்த திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களின் சேவகனாக இருந்து, நான் உங்களின் தேவைகளை விருப்பங்களை நிறைவேற்றுவேன். மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறியுள்ளது. தமிநாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் அதிகரித்திருக்கிறது என்றார்.
இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளா்ச்சி நலத் திட்டங்களைத் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இப்பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.
இதற்காக, குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன.