மருத்துவமனையில் சாந்தன் மரணம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் உயிரிழப்பு.
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.
இதற்கிடையே இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
அவருக்கு மருத்துவமனையில் திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4.00 மணியளவில் சாந்தனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் காலை 7.50 மணியளவில் சாந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.