போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகத்தில் படிப்படியாக பேருந்துகள் நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் இன்று (ஜன. 8) அறிவித்துள்ளன.
நாளை வேலை நிறுத்தம் தொடங்குவதையொட்டி தற்போதுமுதலே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் படிப்படியாக பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் தொழிற்சங்கங்களுடன் இன்று (ஜன. 8) மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. அதனால், நாளை பேருந்துகள் இயங்காது.
வேலைநிறுத்தம் தொடங்கியதாக சென்னை திருவான்மியூர் பேருந்து பணிமனை பெயர்ப்பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்காமல் இருப்பதால் அதனை உடனே வழங்க வேண்டும்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எவ்வித பணப் பலனும் 13 மாதமாக வழங்கப்படவில்லை. 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.