பொங்கல் குழைவாகவும், மனமாகவும் இருக்க பொங்கல் வைக்கும்முன் தாய்மார்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்கலாம்.
• அரிசியை மிக்ஸியில் நொய்யாக உடைத்து பொங்கல் செய்தால், குழைவாக சீக்கிரம் செய்யலாம். ஆனால், பயத்தம் பருப்பை முன்னதாக வேக வைக்க மறக்க வேண்டாம்.
• பொங்கலுக்கு இனிப்புச் சுவை மட்டும் போதாது. முந்திரி, பாதம், அக்ரோட், சாரைப் பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக உடைத்து பரிமாறும்போது மேலே தூவி அலங்கரித்தால் அருமையான சுவை.
• சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, அவலை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் குழைவாகவும் கூடுதலாகவும் இருக்கும்.
• சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, கடைசியாக நூறு கிராம் உதிர்ந்த கோவாவைப் போட்டு நன்றாகக் கலந்துவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
• கொப்பரைத் தேங்காயைத் துருவி திராட்சை, முந்திரிப் பருப்பை அரைத்து சர்க்கரைப் பொங்கலில் கலந்தால் சுவையும் மணமும் கூடும். இதோடு, பசும்பால் சேர்த்தால் மணம் மேலும் அதிகரிக்கும்.
• பொங்கலைக் கிளறும்போது, சிறிது சிறிதாக நெய் ஊற்ற வேண்டும். அரிசியுடன் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் மணம் கூடும்.
• சர்க்கரைப் பொங்கலில் தேங்காயைப் பல்லு பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போட்டால் சுவை இருக்கும்.