அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, இன்று முற்பகல் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி மலையில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும். தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதது இத்தலம். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலம் ஆகும். மேலும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாததரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது.
இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் கொடிமரம் அருகே சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடனும், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மங்களவாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினர். தொடர்ந்து தினமும் காலை - மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் தேரோட்டமும், 10 ஆம் நாளான தைப்பூசம் அன்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா மற்றும் காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.