முகப்பு
தமிழ்நாடு

வீட்டுவேலை செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! தெரியவந்தது எப்படி?

வீட்டு வேலை செய்த சிறுமிக்கு பல்வேறு வன்கொடுமை செய்ததாக திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ, மருமகள் மார்லினா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:


வீட்டு வேலை செய்த சிறுமிக்கு பல்வேறு வன்கொடுமை செய்ததாக திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ, மருமகள் மார்லினா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவேலை செய்ய வந்த சிறுமிக்கு மார்லினா சொல்லொணாத் துன்பங்களை அளித்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களில் நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி பேச வாய்திறந்ததுமே அவருக்கு அழுகை வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்றே, பார்ப்பவர்கள் கலங்குகிறார்கள்.

இந்தப் புகார் மீது பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதாவது, வீட்டு வேலைக்கு வந்த பெண் ரேகாவின் உடலில் தீயினால் சூடு வைத்தும், தலைமுடியை வெட்டியும் மார்லினா கொடுமைப்படுத்தியிருக்கிறார்.

சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்தையும் ஒருவரையே செய்ய வைத்திருக்கிறார். வேலை செய்யாவிட்டால், செருப்பு, துடைப்பம், கட்டை என பலவற்றிலும் ரேகாவை தாக்கியுள்ளனர்.

உடல் முழுக்க காயங்களாக உள்ளது. நகங்களால் கீறியது போலவும், பட்டைப் பட்டையாக சூடு வைத்தது போன்ற தழும்புகளும் ரேகா உடல் முழுக்க உள்ளது. இது எதுவும் அவரது குடும்பத்தாருக்குத் தெரியாத நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் சொந்த ஊருக்குச் சென்றிருந்த போதுதான் நிலைமை குடும்பத்தாருக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக அவரதுதாய் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரேகாவை அழைத்துச் சென்றுள்ளார்.  அப்போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து சென்னை திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி  மெர்லின் மீது நீலாங்கரை காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் விசாரிக்க மறுத்ததால்  சிறுமி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகன், மருமகள் மீதான புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். 

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கருணாநிதி கூறுகையில், என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். அங்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அவர்கள் அதை  எடுப்பார்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.