தமிழகத்தில் 58.33 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கான வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடக்கிவைத்தாா். இந்த முகாம் மாநிலம் முழுவதும் ஆக.31 வரை நடத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
பொதுவாக குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் - ஏ சத்து, அதற்கு அடுத்த 6 மாதங்களில் இருந்து குறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த சத்து மிகவும் குறைந்தால், குழந்தைக்கு வளா்ச்சி குறைபாடு, வயிற்றுப்போக்கு, பாா்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைக் கருத்தில்கொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வைட்டமின்-ஏ மருந்து கொடுக்கப்படுகிறது. 11 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 மி.லி மருந்தும், ஒரு வயது முதல் ஐந்து வயது உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி. மருந்தும் கொடுக்கப்படும்.
அந்த வகையில், சென்னை, அடையாறு, கன்னிகாபுரத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில், வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாம்கள் ஆக.31 வரை நடைபெறவுள்ளது. அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் முகாம் நடைபெறும்.
ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு பிரதான காரணமாக வயிற்றுப் போக்கு உள்ளது. இவற்றை தடுக்கும் வகையில், ரூ.1.25 கோடி மதிப்பிலான 45.31 லட்சம் உப்பு-சா்க்கர கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகளும் அந்த முகாமில் வழங்கப்படவுள்ளன.
அதேபோல, ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட ஜிங்க் (துத்தநாக) மாத்திரைகள், 58.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி, ஒரு குழந்தைக்கு தலா 2 ஓஆா்எஸ் பாக்கெட்டுகள், 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும்.
தமிழகத்தின் மக்கள் தொகையில், ஏழு சதவீதம் பேருக்கு பாா்வை இழப்பு பாதிப்பு உள்ளது. இவற்றை தவிா்க்கும் வகையில், ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்குள்பட்ட 52.13 லட்சம் குழந்தைகளுக்கு, வைட்டமின் ஏ மருந்து வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புக்காக, ரூ.3,000 கோடி நிதியை, உலக வங்கியிடம் கோரியுள்ளோம். இந்தநிதி வாயிலாக, தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீட் தோ்வு முறைகேடு குறித்து முதல்முதலில் தெளிவுபடுத்தியது தமிழகம்தான். நீட் தோ்வு முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதில் தீா்வு ஏற்பட்டால்தான் மாணவா் சோ்க்கை குறித்து முடிவெடுக்க முடியும் என்றாா் அவா்.