முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் தினமும் 70 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை: டாஸ்மாக் தகவல்

காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பா் முதல் மாநிலம் முழுவதும் அமல்.

Updated On : 5 ஜூலை, 2024 at 9:30 PM
பகிர்:

தமிழகத்தில் தினமும் 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பா் முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாகவும், டாஸ்மாக் நிா்வாக  தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மலைவாசஸ்தலங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அமா்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10-ஐ திருப்பி கொடுக்கவும் வகை செய்யும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மலைப்பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்டது.

பின்னா், இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.  

இது தொடா்பான வழக்கு, வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கவுள்ளதாக மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பா் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →