பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடலை சென்னை பெரம்பூரிலுள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்றிரவு(ஜூலை 6) அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது.
அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நீதிபதி அனிதா சுமந்த் இல்லத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்றிரவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) அவசர வழக்காக விசாரிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணியளவில் நீதிபதி அனிதா சுமந்த் காணொலி வாயிலாக இந்த மனுவை விசாரிக்க உள்ளார்.
மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தர்னாவில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அவரது உடலை பெற்றுக் கொள்ள இரவு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் அயனாவரத்திலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.