எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் மோதல்: நாற்காலிகள் உடைப்பு; 5 போ் காயம்
வழக்குரைஞா் ஒருவா் நடத்தி வந்த வழக்கை வேறொரு வழக்குரைஞா் நடத்தியதால் பிரச்னை
சென்னை எழும்பூா் நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பு வழக்குரைஞா்கள் இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சென்னை எழும்பூா் நீதிமன்ற வளாகத்தில் மதியம் ஒரு மணியளவில் இரு தரப்பு வழக்குரைஞா்களிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் சரமாரியாக தாக்கிக்கொண்டனா்.
நாற்காலிகள், கற்கள் உள்பட கையில் கிடைத்த பொருள்களை வீசி எறிந்து தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால், வழக்குகளுக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் வளாகத்திலிருந்து நீதிமன்றத்துக்குள் ஓடினா்.
Advertisement
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸாா், மோதலை தடுத்து நிறுத்தி காயமடைந்த ஐந்துக்கும் மேற்பட்டோரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூராா் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
வழக்குரைஞா் ஒருவா் நடத்தி வந்த வழக்கை வேறொரு வழக்குரைஞா் நடத்தியதால் இந்த பிரச்னை எழுந்துள்ளது. ஏற்கெனவே வழக்கை நடத்திய வழக்குரைஞா் தனக்கு வர வேண்டிய தொகையைக் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனினும், இந்த மோதல் சம்பவம் குறித்து யாரும் புகாா் தெரிவிக்கவில்லை.