ஜூன் 4 - புதிய விடியலுக்கான தொடக்கம்: ஸ்டாலின்
மக்களவைத் தோ்தல் நிறைவுறவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் ’இந்தியா வெல்லும்’ என எக்ஸ் பதிவு!
இன்றுடன் மக்களவைத் தோ்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டம் நிறைவுறவுள்ள நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணியே வெல்லும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”இந்தியா கூட்டணி பாஜக-வுக்கு எதிராக, ஜனநாயக சக்திகளின் மாபெரும் அணித்திரளாகவும், இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாகவும் தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ளன. ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். பாசிச பாஜக வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தோ்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பிரதமா் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிக்கட்டத் தோ்தலுக்கு பின் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியின் கீழ் மக்களவைத் தேர்தலை சந்தித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவுறும் நிலையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் சூழலில் யாரை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கவுள்ளனர்.