குவைத் தீ விபத்தில் பேராவூரணி இளைஞர் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
குவைத் தீ விபத்தில் பேராவூரணியை சேர்ந்த இளைஞர் பலியானதாக வந்த தகவலையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தமிழ்நாடுகுவைத் தீ விபத்தில் பேராவூரணி இளைஞர் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
குவைத் தீ விபத்தில் பேராவூரணியை சேர்ந்த இளைஞர் பலியானதாக வந்த தகவலையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பேராவூரணி: பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியை சேர்ந்த இளைஞர் குவைத் நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பலியானதாக வந்த தகவலையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த மனோகர்(60) விவசாயி. இவரது மனைவி லதா. இவர்களுக்கு புனாஃப் ரிச்சர்ட் ராய் (28 ), ரூஷோ( 25 )என்ற இரண்டு மகன்கள், மூத்த மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குவைத் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமானப் கம்பெனியில் குவாலிட்டி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறையில் குவைத்திலிருந்து புதிதாக கட்டப்பட்ட தமது வீடு கிரகப்பிரவேசத்திற்காக சொந்த ஊருக்கு வந்தவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் குவைத் சென்றுள்ளார்.
இந்நிலையில் குவைத் நாட்டில் புதன்கிழமை அதிகாலை நடந்த அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 150-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கினர்.அந்த கட்டடத்தில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பலியானதில் ஆதனூரை சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராயும் ஒருவர் என வெளிநாடு வாழ் தமிழர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து புனாஃப் ரிச்சர்ட் ராய் தம்பி கூறுகையில், தீ விபத்து ஏற்ப்பட்ட போது எனது அண்ணணின் நண்பர் மாடியிலிருந்து குதித்து கால் சேதமடைந்த நிலையில் குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னோடு சேர்ந்து குதிக்கச்சொன்னபோது ரிச்சர்ட் குதிக்க மறுத்து மாடிப்படி வழியாக இறங்கி ஓடியதாக தெரிவித்துள்ளார். அதனால் தப்பிச்சென்று வேறு எங்கும் உள்ளாரா ,விபத்தில் சிக்கிக் கொண்டாரா என தெரியவில்லை என்றார்.
இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில், இதுவரை எங்களுக்கு அதிகாரபூர்வமாக குவைத் நாட்டிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. விபத்தில் சிக்கி பலியாகியிருந்தால் தமிழக அரசு சடலத்தை மீட்டுக்கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ,கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.