கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு!
சிபிஐ விசாரணைக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் வழங்கினார்.
தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் பதவி விலகக் கோரியும், கள்ளக்குறிச்சி வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் அண்ணாமலையுடன் சென்றிருந்தனர்.
Advertisement
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் ஜூன் 18-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 57 பேர் இதுவரை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.