கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு ஸ்டாலின்: உதயநிதி
கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான பணிகள் இந்தாண்டே தொடங்கும்.
அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சாதனைகளை அவரே முறியடித்துக் கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாடு, இளைஞர் நலம், சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட துறையின் கீழ் மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”விளையாட்டு என்றால் ஒருசிலரின் பெயர்கள்தான் வரலாற்றின் நிலைத்து நிற்கும். ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்டு, கிரிக்கெட் என்றால் மகேந்திர சிங் தோனி. இவர்களின் சாதனைகளை இவர்களே முறியடித்துக் கொள்வார்கள். அதுபோன்று அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் சந்திக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் முந்தைய தேர்தலைவிட வெற்றியை குவித்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் 40-க்கு 40 பதக்கங்களையும் வென்று சாம்பியன் பட்டத்தை திமுக கூட்டணி வென்றுள்ளது.
இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் இருப்பது போல், தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையமும் நம்பர் 1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தாண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் இந்தாண்டே தொடங்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.