பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு!
பெரியார் பல்கலை., துணைவேந்தராக 2021 முதல் பணியாற்றி வருகிறார் ஜெகநாதன்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். அவரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருந்தது.
இதனையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் பல்கலைக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதனிடையே பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025 மே 19 வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். மேலும், பதவிநீட்டிப்புக்கான ஆணையையும் ஜெகநாதனுக்கு ஆளுநர் வழங்கினார்.
பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (PUTER) என்ற தனியார் நிறுவனத்தை அரசின் அனுமதி இன்றி தொடங்கியதாக ஜெகநாதன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அரசு ஊதியம் பெறும் பல்கலைக்கழக பணியாளர்களைப் பயன்படுத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக, ஜெகநாதன் மீது பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் ஜெகநாதான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக சேலம் கூடுதல் ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் உயர்கல்வித் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.