திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மாா்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
மாநிலத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர். வேட்புமனுத் தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாளுடன் வேட்புமனுத் தாக்கல் முடியவுள்ள நிலையில் இன்று வேட்பாளர்கள் பலர் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.