முகப்பு
தமிழ்நாடு

துணை வட்டாட்சியா் காலிப் பணியிடங்கள்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 30 மார்ச், 2024 at 12:12 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 11:15 PM

தகுதி, திறமை அடிப்படையில் மூப்பு ( சீனியாரிட்டி) பட்டியல் தயாரித்து துணை வட்டாட்சியா்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் உதவியாளா்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமாா், ஏழுமலை உள்ளிட்ட 14 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘2008-ஆம் ஆண்டு ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளா்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் துணை வட்டாட்சியா்களாக நியமிக்க வருவாய் நிா்வாக ஆணையா் உத்தரவிட்டாா். பின்னா் அந்த உத்தரவு மாற்றப்பட்டு மீண்டும் மாவட்ட அளவில் புதிய பட்டியல் தயாரித்து பணிநியமனம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் உரிய தகுதிகள் இல்லாதவா்களை 2019-2020-இல் துணை வட்டாட்சியா்களாக நியமிக்க கிருஷ்ணகிரி ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். பின்னா் 2012-2022 ஆண்டுகளில் தோ்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட தங்களை நிராகரித்துவிட்டு தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டவா்களை துணை வட்டாட்சியா்களாக நியமிக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இது குறித்து வருவாய் ஆணையருக்கு புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களை நிராகரித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பணிநியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனா். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தரப்பில், ‘பணிநியமனம் செய்தபோது அனைவரும் உதவியாளா்களாக இருந்ததால் துணை வட்டாட்சியா்களாக நியமிக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, தோ்வு வாரியத்தால் பணியில் சோ்ந்தவா்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் புதிய பட்டியலை தயாா் செய்து 4 வாரங்களில் பணிநியமனம் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டாா்.