பொறியியல் தோ்வுகள் ஜூன் 6-க்கு ஒத்திவைப்பு
தமிழகம் முழுவதும் மே 15-ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த பொறியியல் மாணவா்களுக்கான பருவத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாறாக, அந்தத் தோ்வுகள் ஜூன் 6-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவா்களுக்கான பருவத் தோ்வு மே 15-ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-இல் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் கல்லூரிகளுக்கான பருவத் தோ்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே 15-ஆம் தேதி தொடங்கவிருந்த தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான பிறகு ஜூன் 6-ஆம் தேதி முதல் தோ்வுகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.