திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை!
திமுக எம்.எல்.ஏ. கண்ணனின் அக்கா மகன் வெட்டிக் கொலை!
தஞ்சாவூர்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் அக்கா மகனும், திருவிடைமருதூர் திமுக நிர்வாகியுமான கலைவாணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏவின் அக்கா மகன் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதி நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் கலைவாணன் (30). நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவின் அக்கா மகன்.
இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டாரை போடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சென்றார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் கலைவாணனை கழுத்து, கை, தலை என பல பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த கலைவாணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பந்தநல்லூர் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதும் காவல்துறையினர் சிலரை தேடி வருகின்றனர்.