அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டனம்
அரசுப் போக்குவரத்துக் காக பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டனம் வசூலிப்பதாக ’அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின்’ ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை எவ்வித முன்அறிவிப்புமின்றி திமுக அரசு உயர்த்தி உள்ளது. ஏழை-எளிய மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகள் தனியாக கழன்று விழுவது, மேற்கூரைகள் பெயருவது போன்ற விபத்துகள் பல நிகழ்வதாகவும் மக்களிடமிருந்து புகார்கள் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, உயிரை பணயம் வைத்து ஏழை மக்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதாகவும், இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Advertisement
நகரப் பேருந்துகளில் குறைந்த தூரத்துக்கு கூட ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விரைவுப் பேருந்து என்ற பெயரிலும் குறைந்த தூரத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல எனவும், இந்த விவகாரத்தில் அரசின் உத்தரவை அரசே மீறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.