முகப்பு
தமிழ்நாடு

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

கோட்டை ரயில்நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 மே, 2024 at 11:17 AM
கோப்புப் படம்.
பகிர்:

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிக்காக, கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை நிறுத்தப்பட்டிருந்த பறக்கும் ரயில் சேவை, ஆகஸ்ட் மாதம் முதல் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் ஒன்றாக இப்பாதையில் செல்லும்போது ரயில்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் 4வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது தற்காலிகமானது தான் என்றும், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரத்து செய்யப்படவதாகவும் அறிவித்திருந்தது. இதனால், வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதனால், சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஆனால், 4வது வழித்தடம் அமைக்கும் பணிக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்ததால், திட்டமிட்டபடி பணிகள் முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பயணிகளின் அவதியும் நீடிக்கிறது.

இதற்கிடையே, சிந்தாதிரிப்பேட்டைக்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்திலிருந்து கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுவதாவது, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான 4வது வழித்தடப் பணிகள் 80 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. தற்போது தண்டவாள இணைப்புப் பணிகள் முடியும் நிலையில் இருப்பதாலும், பூங்கா ரயில் நிலைய நடைமேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாரிமுனை உள்ளிட்ட இடங்களுக்குப் பணிக்குச் செல்வோருக்கு வசதியாக இருக்கும் என்றும், விரைவில் பணிகளை முடித்து வழக்கம் போல பறக்கும் ரயிலை இயக்க பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.