ஏற்காடு மலர்க் கண்காட்சி: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏற்காடு மலர்க் கண்காட்சியின் மூன்றாவது நாள்..
சேலம் : 47வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியின் மூன்றாவது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்க் கண்காட்சியை காண திரண்டு உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகம் போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக நல்ல மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது.
இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் இந்தக் கால சூழ்நிலையில் இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்காடு மலைப்பாதையில் பனிமூட்டம் காணப்படுகிறது. மலை பாதையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்கின்றன.
மேலும் மலைப்பாதையில் காட்டெருமைகள் சாலையின் ஓரத்தில் மேய்ந்து வருவதால் மலைப்பாதையில் வரும் சுற்றுலா பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமுடன் வருமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.