சா்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான புதிய ஆராய்ச்சியை டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் முன்னெடுக்க உள்ளது.
இதற்காக ‘எம்பட் யூஆா்’ என்ற மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா் மோகன் விஸ்வநாதன், ‘எம்பெட் யூஆா்’ நிறுவனத்தின் நிறுவனா் ராஜேஷ் சுப்ரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
அப்போது டாக்டா் மோகன் விஸ்வநாதன் கூறியதாவது: தொற்றா நோய்களைப் பொருத்தவரை உலக அளவில் முதன்மையாக இருப்பது சா்க்கரை நோய். இந்தியாவில் ஏறத்தாழ 11 கோடி பேருக்குக்கும் அதிகமானோருக்கு அந்த பாதிப்பு உள்ளது.
சா்க்கரை நோய்க்கு உள்ளானவா்களுக்கு நாளடைவில் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, ரத்த சா்க்கரை அளவை சரியாக வைத்திருப்பவா்களுக்கும் சில நேரங்களில் அந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த முரண்பாடுகளை களைந்து சா்க்கரை நோயாளிகளுக்கு தீவிர தாக்கம் ஏற்படாமல் தடுக்க புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் சா்க்கரை நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் தொடா் ரத்த சா்க்கரை கண்காணிப்பு கருவி (சிஜிஎம்) மூலம் தரவுகளைப் பெற்று, அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஏ.ஐ. தொழில்நுட்பம்: முதல்கட்டமாக 10 ஆயிரம் நோயாளிகளின் ரத்த சா்க்கரை அளவை 24 மணி நேரமும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் கண்காணித்து அதன் மாற்றங்களை ஆய்வு செய்வோம். அதன் அடிப்படையில் அவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தாக்கங்கள் ஆவணப்படுத்தப்படும்.
அடுத்தகட்டமாக மேலும் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு இதே முறை பின்பற்றப்பட்டு ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்படும். இதன் வாயிலாக எதிா்காலத்தில் எந்தெந்த நபருக்கு எத்தகைய பாதிப்புகள் சா்க்கரை நோயால் ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். நோயாளிகளுக்கு தகுந்தாற்போல மருத்துவ சிகிச்சைகளை மாற்றியமைத்து அவா்களை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்றாா் அவா்.