சென்னை - ஆலப்புழா ரயிலில் மதுபோதையில் தகராறு: 4 பேர் கைது
ஓடும் ரயிலில் மதுபோதையில் புகை பிடித்ததை தட்டிக்கேட்ட பயணியை தாக்கிய 4 இளைஞர்கள்.
கோவை: சென்னை - ஆலப்புழா அதிவிரைவு ரயிலில் மதுபோதையில் பயணிகளுடன் தகராறில் ஈடுபட்ட 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா நோக்கிச் சென்ற விரைவு ரயில் (எண். 22639) எஸ்-10 பெட்டியில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தினரும் பயணம் செய்துள்ளார்.
அப்போது ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த இளைஞர்கள் மதுபோதையில் புகைப் பிடித்து கொண்டும், சத்தமாக அநாகரீகமாக பேசி கொண்டும் சக ரயில் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டனர். அதில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் இடத்தில் ஏன் புகை பிடிக்கிறீர்கள் என கேட்ட மணிகண்டனை அந்த இளைஞர்கள் தரக் குறைவாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், கைகளால் தாக்கிவிட்டு திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும் இறங்கி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்தான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சம்மந்தமாக மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் மீது திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். அந்த சம்வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய ரயில்வே காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தனலட்சுமி, தலைமையில் உதவி ஆய்வாளர் பாபு, மற்றும் கார்முகில்வானன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அசோக் மற்றும் மற்றொருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மற்றொருவர் சிறார் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்று(மே 27) அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுடலைராஜ், கரன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரவு நேர ரயில்களில் ரோந்து பணிகளை ரயில்வே காவல் துறையினர் அதிகரித்து வருகின்றன. மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து ஆய்வாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
[ரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24x7 ரயில்வே காவல் உதவி மைய எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500 ஐ தொடர்பு கொள்ளலாம்.]