சூலூர் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
சூலூர் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற தந்தை, மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே போகம்பட்டியில் சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மகள் பத்தாவது படிக்கும் தமிழ்செல்வி மற்றும் மணிகண்டனின் அண்ணன் மகள் எட்டாவது படிக்கும் புவனா ஆகியோர் அருகிலுள்ள குட்டையில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்றுள்ளனர்.
மணிகண்டன் சுண்டக்காமுத்தூரில் இருந்து போகம்பட்டியில் தனது தாய்விட்டிற்கு வந்த தனது மனைவி மற்றும் மகளை பார்க்க வந்துள்ளார்.
இந்நிலையில் மூவரும் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென கால் வழுக்கி குட்டையில் மூழ்கிய மகள்களை நீச்சல் தெரியாத மணிகண்டன் காப்பாற்ற முயன்று உள்ளார். அப்போது மூன்று பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.
நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் மூன்று பேரையும் மணிகண்டன் மனைவி தேடி உள்ளார். அப்போது அவர்களது உடை மட்டும் குட்டையின் ஓரத்தில் கிடந்துள்ளது. இதனை அடுத்து ஊர்க்காரர்களிடம் தெரிவித்து குட்டையில் இறங்கி தேட முயன்றனர்.
ஆனால் சேரும் சகதியும் அதிகமாக இருந்ததால் உடனடியாக சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு அலுவலர் ரகுநாதன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய மணிகண்டன், தமிழ்ச்செல்வி, புவனா ஆகிய மூன்று பேரின் உடல்களை மீட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி சிங்காநல்லூர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி புதுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் உள்ளிட்டோர் அப்பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை குளிக்க வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
மேலும், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென பொதுமக்கள் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர்.