ரூ. 4 கோடி விவகாரம்: நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் ஆஜராக சம்மன்
சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை மறுநாள்(மே 31) ஆஜராக சம்மன்.
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இதனை கொண்டு வந்ததாக நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பணம் நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் அவரது ஹோட்டலில் இருந்து தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் ஆவணங்களை பெற்று, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை விடியோ பதிவாக செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சில இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நவீன், சதீஷ், பெருமாள் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தற்போது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தொழில் பிரிவு நிர்வாகி கோவர்தன் மற்றும் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த சம்மனில் இவர்கள் நான்கு பேரும் நாளை மறுநாள் 31 ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கங்கள் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் அடுத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.