வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்..
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்தியப் பகுதிகளிலிருந்து வீசும் வறண்ட காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது.
கடந்த 6-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருந்த நிலையில், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சியால் தாழ்வுப்பகுதி உருவாவது தாமதமானது. இந்த நிலையில் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதாக இந்திய வானிலை தெரிவித்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.
இது அதற்கடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மேலும் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும், தெற்கு உள் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று(நவ.09) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.