எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடி விவாதத்துக்கு விடுத்த அழைப்பை ஏற்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான ஆட்சி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இரு ஆட்சிகளிலும் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து நேரடி விவாதத்துக்கு தயார் என்று எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
”நான் முதல்வராக இருந்த காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்தேன் என புள்ளிவிவரத்தோடு துண்டுச்சீட்டு இல்லாமல் நான் சொல்கிறேன். முதல்வா் ஸ்டாலின், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தீா்கள் என்று நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் போடும் மேடைக்கே வருகிறேன். மக்கள் கேட்கட்டும், மக்களே தீா்ப்பு கொடுக்கட்டும். அதற்கு நாங்கள் தயாா்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், இபிஎஸ் அழைப்பை ஏற்று முதல்வரோ, அமைச்சர்களோ விவாதத்தில் பங்கேற்பார்களா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், என்னை அழைத்தால் நான் விவாதத்தில் பங்கேற்க தயார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.