தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம்வகிக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது:
”என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார் என்றால், அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?
தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா?
ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.
இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?
குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.