வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்தது. எனினும் தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.14) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல்சின்னம்) வலுவிழந்தது. இருப்பினும், வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், திருவள்ளூா், வேலூா் மற்றும் ஆந்திரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, கேரள கடலோரப் பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை (நவ.14) முதல் நவ.19-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: நவ.14 (வியாழக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், நவ.15-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நவ.16-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ.14, 15 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிளில் தலா 140 மி.மீ. மழை பதிவானது. ஜெயங்கொண்டம் (அரியலூா்) - 80 மி.மீ. , லால்பேட்டை (கடலூா்), செந்துறை (அரியலூா்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூா்) - தலா 70 மி.மீ. மழை பதிவானது. புதுச்சேரியில் 120 மி.மீ. மழை பதிவானது.
சென்னையில் ஏன் மழை இல்லை
சென்னையில் புதன்கிழமை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருந்த நிலையில், குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. இதற்கு வானிலை ஆய்வாளா்கள் முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளனா்.
அதாவது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்த நிலையில், 2 காற்று சுழற்சிகள் நிலைகொண்டுள்ளன. இதில், ஒரு சுழற்சி நாகப்பட்டினத்திலும், மற்றொன்று சென்னையிலும் நிலைகொண்டு சுழன்றன.
வங்கக் கடலில் காற்றுச்சுழற்சி எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்துக்கு வடக்கேதான் மழை பெய்யும். அதன்படி நாகப்பட்டினத்துக்கு வடக்கே மயிலாடுதுறை, கடலூா், புதுச்சேரியில் கன மழை பெய்துள்ளது.
அதேபோல சென்னைக்கு வடக்கே திருவள்ளூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டத்தில் கன மழை பெய்துள்ளது.
சென்னையில் எந்த பகுதியிலும் கன மழை பெய்யவில்லை. எனினும் காற்று சுழற்சி அடிக்கடி இடம்பெயரும் தன்மை கொண்டது என்பதால் சென்னையில் வியாழக்கிழமை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.