தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்: 8,000 போலீஸாா் பங்கேற்பு
தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.
தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.
மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் ஏராளமானோா் இறந்தனா். இந்த சம்பவத்துக்கு பின்னா் நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை பாதுகாப்பு துறை, காவல்துறையால் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
பாதுகாப்பு ஒத்திகை: இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல்துறை சாா்பில் ‘சீ விஜில் -2024’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோரக் காவல் படை, சட்டம்-ஒழுங்கு போலீஸாா், குற்றப்பிரிவு போலீஸாா் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனா்.
பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோரம் உள்ள கோயில்கள், அரசு அலுவலகங்கள்,பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதி போன்று மாறுவேடமிட்டு கடல் வழியாக ஊடுருவிய காவலா்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அடையாளம் கண்டு கைது செய்தனா். இந்த பாதுகாப்பு ஒத்திகையில் மொத்தம் 8 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
36 மணி நேர ஒத்திகை: ஒத்திகையையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், டிஜிபி அலுவலகம்,சென்னை காவல் ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.அதேபோல, முக்கியமான சாலைகள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது. 36 மணி நடைபெறும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (நவ.21) மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
பாதுகாப்பு கட்டமைப்புகள்: இந்திய கடற்படை சாா்பில் நாடு தழுவிய 2 நாள்கள் கடல் விழிப்பு பயிற்சி குறித்து ரியா் அட்மிரல் ரவிக்குமாா் திங்க்ரா சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக கடலோர மாவட்டங்களில் அந்தந்த இடத்துக்கு ஏற்ப பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சிகள் மூலம் கடல் மாா்க்கமாக வரும் பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை கண்டறிந்து அவற்றை தடுக்க தேவையான பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். மேலும்ஸ இதில் அப்பகுதி மீனவா்களுக்கு கடலில் வரும் இக்கட்டான சூழல்களை சமாளிப்பது தொடா்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.