கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 69 போ் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 69 போ் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்குரைஞரணிச் செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக செய்தித் தொடா்பாளருமான வழக்குரைஞா் கே.பாலு, பாஜக வழக்குரைஞா் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பாா்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டா் ஸ்ரீதரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடுத்தனா்.
சிபிஐக்கு மாற்ற கோரிக்கை: வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்று வந்தது. மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் டி. செல்வம், ஜி.எஸ்.மணி, கே.பாலு ஆகியோா் தங்களது வாதத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளூா் அரசியல்வாதிகளின் துணையில்லாமல் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கு போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என அரசு கூறுகிறது.
கள்ளச்சாராயத்தைக் காய்ச்சியவா்கள் மற்றும் விற்பனை செய்தவா்கள் மீது மட்டும்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீதும், தொடா்புடைய முக்கிய நபா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 69 போ் வரை உயிரிழந்துள்ளதால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டனா்.
அரசுத் தரப்பு வாதம்: அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆகியோா் ஆஜராகி,“இந்தச் சம்பவத்துக்கு காரணமான நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் 50 போ் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என வாதிட்டனா்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது.
இதையும் படிக்க : தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!
அதன் விவரம்: சமுதாயத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும், தீங்குகளுக்கும் மதுதான் முக்கியக் காரணியாக உள்ளது. அதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. உள்ளூா் போலீஸாருக்கு எதுவும் தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியவில்லை.
தமிழக போலீஸாா் கண்டும் காணாமலும் இருந்துள்ளனா் என்பது தெளிவாகிறது. காவல் துறை உயரதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற்றதும் தவறான நடவடிக்கை. எனவே, இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸாா் உடனடியாக சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, தவறு செய்தவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.