முகப்பு
தமிழ்நாடு

மகள் தற்கொலை: காதலனை தேடிக்கண்டுபிடித்து கொன்ற தந்தை, மகன்!

மகள் தற்கொலை செய்துகொண்டதால் ஆத்திரத்தில் காதலனைக் கொலை செய்த தந்தை, மகன்.

Updated On : 25 நவம்பர், 2024 at 3:36 PM
கொலை நடந்த இடம்
பகிர்:

கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக்கருதி தந்தை மற்றும் மகன் ஆகியோர் தனியார் மருத்துவமனை ஓட்டுநர் தமிழ்செல்வன் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

துடியலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பியோடிய தந்தை, மகன் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் 27 வயதான தமிழ்ச்செல்வன். கடந்த ஒரு வருடமாக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மாவிற்கு சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யன் கொல்லகொண்டான் கிராமம் ஆகும்.

Advertisement

இந்த கிராமத்திற்கு தமிழ்ச்செல்வன் அடிக்கடி சென்று வந்த போது அந்தப் பகுதியை சேர்ந்த மலைக்கனி என்பவரின் மகள் ஆனந்தி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வன் ஆனந்தியுடன் பழகிக் கொண்டிருக்கும்போதே திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார்.

திரைப்பட பாணியில் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் 2 பெண்களை காதலித்துவந்துள்ளார். இதன் காரணமாக ஆனந்தியை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனந்தி தற்கொலைக்கு தமிழ்ச்செல்வன் தான் காரணம் என்று ஆனந்தியின் அப்பா மலைக்கனி மற்றும் அண்ணன் ராஜாராம் ஆகியோர் முடிவு செய்து தமிழ்ச்செல்வனை கொலை செய்யும் நோக்கத்துடன் நவ. 24ஆம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து கோவைக்கு வந்துள்ளனர்.

இன்று காலை 10 மணி அளவில் துடியலூரில் தனியார் மருத்துவமனை முன்பு வந்து நின்று கொண்டு, தமிழ்ச்செல்வனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வரவழைத்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் பேசியிருக்கிறார்கள்.

அப்போது இருவரும் சேர்ந்து தமிழ்ச்செல்வனை கத்தியால் கழுத்தை அறுத்தும், மார்பு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியும் கொலை செய்துவிட்டு, அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்து தமிழ்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இறந்து போன தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட கத்தியையும் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தந்தை, மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.