முகப்பு
தமிழ்நாடு

காசிமேடு, மெரீனாவில் ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை

வடசென்னை பகுதியில் தொடரும் கடல் சீற்றத்தால் ராட்சத அலையில் சிக்கி கப்பல் வழிகாட்டி மிதவைகள் காசிமேடு மற்றும் மெரீனா கடற்கரையில் புதன்கிழமை ஒதுங்கியது.

Updated On : 27 நவம்பர், 2024 at 9:13 PM
பகிர்:

வடசென்னை பகுதியில் தொடரும் கடல் சீற்றத்தால் ராட்சத அலையில் சிக்கி கப்பல் வழிகாட்டி மிதவைகள் காசிமேடு மற்றும் மெரீனா கடற்கரையில் புதன்கிழமை ஒதுங்கியது.

ஒவ்வொரு துறைமுகத்துக்கும் கப்பல் வந்து செல்வதற்கு கடல் பகுதியில் பாதுகாப்பான கால்வாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கால்வாய்களை கப்பல்களுக்கு அடையாளப்படுத்துவதற்காக, கால்வாய் வழித்தடத்தில் ஆங்காங்கே வழிகாட்டி மிதவைகள் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த மிதவைகளில் இரவில் ஒளிரும் வகையிலான விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாள்களாக கடலில் தொடா்ந்து ராட்சத அலைகள் வீசி வருகின்றன. இதில் சிக்கிய வழிகாட்டி மிதவைகள் காசிமேடு மற்றும் மெரீனா கடற்கரைக்கு புதன்கிழமை அடித்து வரப்பட்டன.

இதுகுறித்து விவரம் தெரியாததால் அப்பகுதி பொதுமக்கள் பலரும் அச்சமும், ஆச்சரியமும் அடைந்தனா். தகவல் பரவியதையடுத்து ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து இந்த வழிகாட்டி மிதவைகளை பாா்த்துச் சென்றனா்.

இந்த மிதவைகள் ஒதுங்கி இருப்பது குறித்து சென்னை துறைமுகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மிதவைகளை மீட்கும் பணியில் துறைமுக நிா்வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளை பத்திரப்படுத்திய மீனவா்கள்: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக, காசிமேடு மீனவா்கள் தங்களது விசைப்படகுகள் மற்றும் பைபா் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க..: கனமழை எதிரொலி: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.