வெளுத்து வாங்கும் மழைக்கு இடையே எப்படி இருக்கிறது சென்னை?
புயல் சென்னையை நெருங்கி வருவதால் வெளுத்து வாங்கும் மழைக்கு இடையே எப்படி இருக்கிறது சென்னை?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், 134 இடங்களில் சென்னையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 1,600 மோட்டார் பம்புகள் கொண்டு முக்கிய இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
முக்கிய சாலைகள், அதாவது ஓஎம்ஆர், மயிலாப்பூர் சாலை, ஐந்து ஃபர்லாந்து சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போதுவரை 8 பகுதிகளில் மட்டும் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 126 இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதைகளைப் பொருத்தவரை மணலியில் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, வில்லிவாக்கும் சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை என முக்கிய சுரங்கப்பாதைகள் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.
தற்போது சென்னனையில் 126 இடங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற உயர்தர பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை உடனடியாக அகற்றும் பணிகளும் நடந்து வருகின்னற. இதுவரை 5 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னையில் கிட்டத்தட்ட 330 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது.
சென்னையில் மழை மற்றும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள 22 ஆயிரம் வீரர்களும் 18,500 தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழை தொடர்வதால் திரையரங்குகள் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவையும் குறிப்பிட்ட இடைவெளியில்தான் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.