அக். 8ல் மனிதச் சங்கிலி போராட்டம்: அதிமுக அறிவிப்பு!
அதிமுக சார்பில் வருகிற அக். 8 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
திமுக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் வருகிற அக். 8 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசைக் கண்டித்தும் மக்கன் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அக். 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும்
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மனித சங்கிலிப் போராட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டங்களில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மதுரையில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.