மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
தமிழக -கர்நாடக எல்லையில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று(அக். 5) இரவு பரவலாக மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக இருந்தது. இன்று(அக். 6) காலை, அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,713 கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு: அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.67 டி எம் சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.